கோபி : தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள 70 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 7வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து நீதிபதி பட்டு தேவாந் தீர்ப்பின்படி சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.காலை உணவு திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 6,752 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு கால பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். சத்துணவு மையங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோபி யூனியன் அலுவலகம் முன்பு ஒன்றிய தலைவர் ஈஸ்வரி தலைமையில் துணைத்தலைவர் மைவிழி முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கண்ணம்மாள் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணைத்தலைவர் ராதா, இணைச்செயலாளர் பிரீதா, தணிக்கையாளர் சுகுணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுமதி, கோமதி, அனிதா, தவமணி, குப்புலட்சுமி, பழனியம்மாள், அபிநயா, சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய பொருளாளர் சாந்தாமணி நன்றி கூறினார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி: அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் ராதா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தேசிகன், பொருளாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் மஞ்சுளா, கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
7வது ஊதியக் குழுவின் குறைகளை களைந்து சிறப்பு பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும். சமையல் உதவியாளர் நியமன கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்பதை திரும்ப பெற்று, பழைய 5ம் வகுப்பு என அரசாணையை திருத்தி வெளியிட வேண்டும்.
சத்துணவு பணியாளர்கள் பணி நியமன அரசாணைப்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட இணை செயலாளர் ஷபானா ஆஸ்மி, துணைத் தலைவர் முருகன் உட்பட 50க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.மொடக்குறிச்சி: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் செல்வி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கோமதி விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கான 70 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், 7வது ஊதிய குழுவின் சிறப்பு பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும், சமையல் உதவியாளர் நியமனத்தில் கல்வி தகுதி 5ம் வகுப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும், அகவிலை பட்டியலுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும்,ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62ஆக உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஓய்வு பெற்ற முன்னாள் செயலாளர் ஜான் சுந்தரம், முன்னாள் தலைவர் தங்கவேல், ஒன்றிய பொருளாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய துணை பொருளாளர் சாந்தாமணி நன்றி கூறினார்.