ஜெய்ப்பூர்: மருத்துவ இளங்கலை படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இம்முறை முறைகேடுகளை தவிர்க்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, ராஜஸ்தான், ஒடிசாவில் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானில் 3 பேர் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் தருவதாக கூறி உள்ளனர். இதற்காக மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் நேற்று முன்தினம் குருகிராமுக்கு அழைத்துச் சென்று தலா ரூ.40 லட்சம் தர வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் மாணவர்களின் குடும்பத்தினர் வினாத்தாளை காட்டுமாறு கூறியதற்கு மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் முறைகேட்டில் ஈடுபட்ட பல்வான் (27), முகேஷ் மீனா (40), ஹர்தாஸ் (38) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே போல ஒடிசாவில் ஆள்மாற்றம் செய்து தேர்வெழுத வைத்து மருத்துவ சீட் வாங்கித் தருவதாக தேர்வாளர்களிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாணவர்களின் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற்று போலி அடையாள அட்டை உருவாக்கி அதன் மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி நீட் தேர்வில் வெற்றி பெற உதவுவதாக கூறி உள்ளனர். இதற்காக தலா ஒரு மாணவரிடம் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வாங்கி உள்ளனர். இதுதொடர்பாக ஜார்க்கண்டை சேர்ந்த பிரியதர்ஷி குமார், பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார், ஒடிசாவை சேர்ந்த சுனில் சமந்த்ரே மற்றும் ருத்ர நாராயண் பெஹெரா ஆகிய 4 பேரை ஒடிசா போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.