புதுடெல்லி: கென்யாவில் நடந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இந்தியர் பலியான நிலையில், அவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கென்யா நாட்டின் நயந்தருவா கவுண்டியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பகுதியில் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பலமுறை உருண்டு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி, மழை பெய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில், செங்குத்தான பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மாவேலிக்கரையைச் சேர்ந்த கீதா ஷோஜி ஐசக் (58), ஜஸ்னா குட்டிக்காட்டுச்சாலில் (29), ரூஹி மெஹ்ரி முகமது (ஒன்றரை வயது), ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த ரியா ஆன் (41), டைரா ரோட்ரிக்ஸ் (8) ஆகிய 6 இந்தியர்கள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆறாவது இந்தியரின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தின்போது பேருந்தில் 28 சுற்றுலாப் பயணிகள், மூன்று உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர் இருந்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், இந்த விபத்து மிகவும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அவசர அடிப்படையில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அலுவலகம், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம், உடல்களை விரைவாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.