சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வங்க கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 37 பேரை அவர்களின் 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே 27 பேரை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். ஒன்றிய அரசும் அதன் பங்குக்கு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும் கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களையும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.