சேலம், ஆக.20: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் ஆய்வு அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் குறிப்பிட்ட இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா, சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். சேலம் சரகத்தில் 2220 தனியார் வாகனங்களில், 2157வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதுவரை ஆய்வு உட்படுத்தாத 63 பள்ளி வாகனங்கள், ஆய்வுக்கு பிறகே இயக்க வேண்டும். ஆய்வு உட்டுபடுத்தாத 63 வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி முடித்து அறிக்கையை சென்னை போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வில், சென்சார் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தாத 63தனியார் பள்ளி வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் ஆய்வு செய்த பிறகே இயக்க வேண்டும். குறைபாடு கண்டறியப்பட்ட பள்ளி வாகனங்கள், இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்த பிறகே அந்த வாகனத்திற்கு தகுதிச்சான்று வழங்கப்படும்’’ என்றனர்.