விருதுநகர், ஜூலை 2: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடப்பாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்த உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். நூறு சதவீத தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
கல்விக்கூடங்களில் கலெக்டர் மற்றும் கல்விசாரா அலுவலர்களின் தலையீடுகளை முறைப்படுத்திட வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.