திருவண்ணாமலை, ஜூலை 1: வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 538 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், டிஆர்ஓ ராம்பிரதீபன், உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 538 பேர் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிலை குறித்து துறை வாரியாக கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரைதளத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், உதவி உபகரணங்கள் கேட்டு பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார். இந்நிலையில், வழக்கம்போல குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.