சென்னை: அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பெரிய கருப்பன், கண்ணப்பன் மற்றும் ரகுபதி மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் சென்று, தேர்தல் விதி மீறியதாக கரூர் டவுன் போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போதும் அதிமுக-திமுகவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர்.
2016 சட்டமன்ற தேர்தலின் போது சிவகங்கையில் அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் மீது பள்ளத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேபோல் அமைச்சர்கள் கண்ணப்பன், ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பெரிய கருப்பன், கண்ணப்பன், ரகுபதி ஆகியோர் தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், எங்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.