விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் முட்டத்தூர் கிராமத்தில் அரசு ஆதரவு பெற்ற ஒய்காஃப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 12ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றனர். அப்போது முட்டத்தூர் அருகே கடை வீதியை சேர்ந்த நபர் ஒருவர் குல்பி ஐஸ் விற்றுள்ளார். அதை 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
பின்பு வீட்டுக்கு சென்ற நிலையில் அவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை மீட்டு உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.