சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆக.4ம் தேதி (இன்று), 5ம் தேதி (சனிக்கிழமை), 6ம் தேதி (ஞாயிறு) ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு, இன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 6,948 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இருந்த போதிலும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று (ஆக.4ம் தேதி) தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிறு பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 8,107 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.