சென்னை: வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அரசு, அதற்கான பட்டாவும் வழங்கியது. இந்த பட்டாவை ரத்து செய்யக் கோரி, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பியுள்ளார். கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி பஞ்சாயத்து தலைவர் மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது அடிப்படை உரிமைகளை மீறிய செயல்.
இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, தான் தெரியாமல் செய்துவிட்டதாக நீதிபதியிடம் கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் வருத்தம் தெரிவித்தார். மூன்றாம் பாலித்தவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது. அவர்களை வேறுபடுத்தி பார்ப்பதன் மூலம் சமூகத்தில் வேற்றுமை ஏற்படுகிறது என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.