Thursday, September 21, 2023
Home » மதுராந்தகம் அருகே பரிதாபம் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி: ஊரப்பாக்கத்தில் ஐடி இன்ஜினியர்கள் 2 பேர் பலி

மதுராந்தகம் அருகே பரிதாபம் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி: ஊரப்பாக்கத்தில் ஐடி இன்ஜினியர்கள் 2 பேர் பலி

by Arun Kumar

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சாலையோரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஊரப்பாக்கத்தில் லாரி மீது பைக் மோதியதில் ஐடி இன்ஜினியர்கள் 2 பேர் பலியாயினர்.
திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வந்துகொண்டிருந்தது. இந்த கார், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் அருகே வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், படுவேகமாக சென்று சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இந்த பள்ளம் சுமார், 20 அடிக்கு மேல் இருந்ததால் கார் தலைகுப்புற கவிழ்ந்து சேதம் அடைந்தது. காரில் சிக்கியவர்கள் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு சாலையில் சென்றவர்கள் ஓடிவந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் விரைந்துவந்தனர். பின்னார் காரின் கதவுகளை உடைத்து உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது இறந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, திம்மிநாயக்கன்பட்டி பச்சமலையான்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் கதிரவன் (30), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு தெரு ஆலங்கோட்டை போஸ்ட் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (55), திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை சிவானந்தா தெருவை சேர்ந்த கார்த்திக் (37) என்பது தெரியவந்தது. இதில் கதிரவன் ஒருவேலை விஷயமாக சென்னைக்கு 3 பேரும் வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்து சம்பந்தமாக மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ஊரப்பாக்கத்தில் 2 பேர் பலி

ஊரப்பாக்கத்தில் சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த பெட்ரோலியம் லாரி மீது பைக் மோதியதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இன்ஜினியர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் விக்னேஷ்(26), அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராஜ்குமார்(27). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் சென்னை, துரைப்பாக்கத்தில் தங்கி அங்குள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தனர். இதில் இருவரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊட்டிக்கு சென்று விட்டு நேற்று இரவு சென்னை துரைப்பாக்கத்துக்கு திரும்பினர். அப்போது கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் பெட்ரோலியம் லாரி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது விக்னேஷ், ராஜ்குமார் வந்த பைக் பயங்கரமாக மோதியது.

அவர்கள் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் நள்ளிரவில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?