அவிநாசி: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் இளம்பெண், வாலிபருடன் உல்லாசமாக இருப்பது போல் நடித்தார். இதை வீடியோ எடுத்து மிரட்டி வாலிபரிடம் 2 பேர் நகை, பணம் பறித்தனர். இவ் வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெருமாநல்லூரை சேர்ந்தவர் கிருத்திகா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஈரோடு மாவட்டம், அரச்சலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (27). இருவருக்கும் பஸ் பயணத்தில் பழக்கம் ஏற்பட்டு போனில் அடிக்கடி பேசி வந்தனர்.
இந்நிலையில் கிருத்திகா, இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி ஜெகதீசனை நேரில் வரச்சொல்லி உள்ளார். இதையடுத்து ஜெகதீசன் பெருமாநல்லூர் அருகே உள்ள தட்டாங்கோட்டை சொட்டமேடு என்ற பகுதிக்கு வந்தார். அங்கு காத்திருந்த கிருத்திகா, ஜெகதீசனை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பிறகு இருவரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது 2 பேர் திடீரென வீட்டில் நுழைந்து இருவரும் உல்லாசமாக இருந்ததை போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததாகவும், அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உறவினர்களிடம் கூறுவோம், இதை செய்யாமல் இருக்க பணம் தரவேண்டும் என மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகதீசன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயினையும், கையில் வைத்திருந்த பணத்தையும் அவர்களிடம் கொடுத்தார்.
உடனடியாக இருவரும் கிருத்திகாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பிசென்றனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் ஜெகதீசன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் தர்மபுரியை சேர்ந்த அருண் (33), ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி(51) ஆகிய இருவரும், பட்டதாரி இளம் பெண்ணான கிருத்திகாவை ஜெகதீசனுடன் தனிமையில் இருக்குமாறு நடிக்க வைத்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து பழனிச்சாமி, அருண், கிருத்திகா ஆகிய மூவரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.