ஊட்டி: நீலகிரி மாவட்ட காவல்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தனிப்பிரிவு எஸ்ஐயை தனது காரில் வீட்டிற்கு எஸ்பி அனுப்பி வைத்தார்.நீலகிரி மாவட்ட காவல்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக ரவி என்பவர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக தனி பிரிவில் சிறப்பு எஸ்ஐ மற்றும் எஸ்ஐ ஆக ரவி பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அவர் ஓய்வு பெற்றார். இவருக்கு ஊட்டியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் பிரிவுபசார விழா மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமையில் நடந்தது. அவரைப் பாராட்டி பலரும் பேசினர். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நீலகிரி எஸ்பி பிரபாகர் தான் பயன்படுத்தும் காரில் ஏற்றி, ஜெயில் ஹில் பகுதியில் உள்ள ரவியின் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வழியனுப்பி வைத்தார். இதனால் ரவி நெகிழ்ச்சி அடைந்தார். ஓய்வுபெற்ற எஸ்ஐயை, எஸ்பி தனது காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்தது இதுவே முதல் முறை. இதனை நீலகிரி மாவட்ட போலீசார் வெகுவாக பாராட்டினர்.