சென்னை: தாமிரபரணி ஆற்று பாலத்தில் விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த சங்கர் குமார் நேற்று முன்தினம் இரவு முறப்பநாடு அருகில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கை வைத்தபோது நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
காவலர் சங்கர் குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சங்கர் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.