சென்னை: 3 மண்டலங்களில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 800மிமீ விட்டமுள்ள பிரதான உந்துகுழாய் இணைப்புப் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படுவதால் நாளை (31ம் தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை மண்டலம் 4, 5, 6க்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மண்டலம் 4 – 42, 43, 48 தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகள், மண்டலம் 5 – 49, 50, 51, 52, 53 ராயபுரம் பகுதி, மண்டலம் 6 – 73, 77, 76 புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகள். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetro water.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.