டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் 100 வயதிற்கு மேல் அதிகமாக வாழும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது ஜப்பான். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இப்படியே சென்றால் காலப்போக்கில் வயதானவர்கள் மட்டும் அதிகம் வாழும் நாடாக மாறிவிடுமே என்ற அச்சம் அந்த நாட்டின் ஆட்சியாளர்களை தொற்றிக் கொண்டுள்ளது.
இதற்கு தீர்வாக ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை சரிக்கட்டும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கையை டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதேப் போன்று தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் முன்கூட்டியே வேலைநேரத்தில் இருந்து செல்லும் புதிய கொள்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 2023ம் ஆண்டில் 7.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இது போன்ற குறைவான பிறப்பு விகிதமும், வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்க தொடங்கி உள்ளது. பணிக்கு செல்வோரின் உடல் மற்றும் மனநலத்தை சீராக வைத்து குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும் வகையிலும், பெண்கள் மட்டுமே குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற பாலின ஏற்றத்தாழ்வு நிலையை களையும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை, ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.