சென்னை: தொழிலாளர்களை தேடி மருத்துவம் மூலம் இதுவரை 3.77 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெண்கள், கல்வி, சுகாதாரத்திற்கு முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பயனடையும் வகையில் தொடங்கப்பட்டது தான் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பான திட்டம். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க இந்தியாவிலேயே முதன்முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் கோடிக்கணக்கானோர் பயன்பெற்றனர்.
இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், மருத்துவ குழுவினர் தொழிற்சாலைகளுக்கே நேரடியாகச் சென்று, தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்ற நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், மதுரை ஆகிய 35 மருத்துவ மண்டலங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு பரிசோதனைகள் நடைபெறும்.
499 நிறுவனங்களில் இந்த திட்டம் மூலம் பயன்பெற்று உள்ளனர். இதுவரை 3.77 லட்சம் தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது தொழிலாளர்களுக்கு ஏதாவது நோய் பாதிப்பு இருந்தால் முதற்கட்ட சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். இந்த திட்டம் மூலம் 50 லட்சம் தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.