Friday, July 18, 2025
Home செய்திகள்Showinpage 2 மாத தடைக்காலம் இன்றுடன் நிறைவு மீனவர்கள் நாளை கடலுக்கு பயணம்

2 மாத தடைக்காலம் இன்றுடன் நிறைவு மீனவர்கள் நாளை கடலுக்கு பயணம்

by Francis

ராமேஸ்வரம்: தமிழக கடலில் அமலில் இருந்த 2 மாத மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. நாளை அதிகாலை முதல் தமிழக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
தமிழக கடலில் மீன் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் துவங்கி ஜூன் வரை 2 மாதங்கள் கடலில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வங்காள விரிகுடா, பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது. இந்த ஆண்டு ஏப்.15ம் தேதி முதல் மீன்பிடித்தடை காலம் துவங்கியது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைநிறுத்தம் செய்யப்பட்டன. இதனால் படகில் செல்லும் மீனவ தொழிலாளர்கள், கரையில் மீன் ஏற்றும் தொழிலாளர்கள் என தமிழகம் முழுவதும் மீன்பிடி தொழில் சார்ந்த சுமார் 2 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

இவர்களில் பெரும்பகுதியினர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி சென்றனர். பலர் உள்ளூர்களில் கட்டுமானப் பணி, கூலி வேலை என பலதரப்பட்ட வேலைகளை செய்து வந்தனர். இதன்மூலம் அன்றாட வாழ்வியல் செலவுகளை சமாளித்து வந்தனர். இதனிடையே தமிழகம் முழுவதும் கடலுக்கு செல்லாமல் மீன்பிடித்துறைகளில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள் கரையேற்றப்பட்டு இயந்திர பழுதுகள் நீக்கி மராமத்து செய்யும் பணிகள் நடைபெற்றது. மராமத்து செய்து வலுவூட்டப்பட்ட விசைப்படகுகளுக்கு பச்சை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு கடலுக்கு செல்வதற்கு தயாரான நிலையில் அந்தந்த துறைமுகங்களில் புதுப்பொலிவுடன் கடலுக்குள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதியான பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விசைப்படகுகள் கடலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது.

பாக்ஜலசந்தி கடலில் முறையே சனி, திங்கள், புதன் ஆகிய நாட்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும். மன்னார் வளைகுடா கடலில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதன்படி ராமேஸ்வரம் முதல் நாகை கோடியக்கரை வரையிலான பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் நாளை மறுநாள் (ஜூன் 16) கடலுக்கு செல்கின்றனர்.
பாம்பன் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் நாளை (ஜூன் 15) முதல் கடலுக்கு செல்கின்றன. தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளதால் தமிழக முழுவதும் அந்தந்த துறைமுகங்கள் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது. மண்டபம் பகுதியில் 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்வதற்கான பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi