திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடந்த இஸ்ரோ தொழில் நுட்ப பணியாளருக்கான தேர்வில் செல்போன், ப்ளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு: திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உள்ளது. இந்த மையத்தின் தொழில்நுட்பப் பிரிவு பணியாளருக்கான தேர்வு நேற்று பல்வேறு மையங்களில் நடந்தது. இந்தநிலையில் நேற்று காலை திருவனந்தபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது.
அதில் பேசியவர், இஸ்ரோ தேர்வில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் காப்பியடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். இதையடுத்து போலீசார் உடனடியாக தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உஷாரான தேர்வு மைய அதிகாரிகள், தேர்வு எழுத வந்தவர்களை மிகத் தீவிரமாக கண்காணித்தனர். இதில் காட்டன்ஹில், செயின்ட் மேரிஸ் பள்ளியில் தேர்வு எழுதிய 2 பேர் செல்போன், ப்ளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதியதை கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த செல்போன், ப்ளூடூத் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். ஹால் டிக்கெட்டில் இருந்த விவரப்படி 2 பேரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் (26), சுமித் குமார் (25) என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில் 2 பேரும் ஆள்மாறாட்டம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் இருவரும் கைது செய்யப்பட்டனர். நூதன முறையில்… தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக இடுப்பில் செல்போனை வைத்து அதன் மேல் ஒரு பெல்ட்டை கட்டி உள்ளனர். செல்போன் கேமராவை ஆன் செய்து அதை சட்டை பட்டன் துளைக்கு நேராக தெரியும்படி வைத்துள்ளனர். வினாத்தாள் கிடைத்தவுடன் அதை செல்போன் கேமராவில் தெரியும்படி பிடிப்பார்கள். அது மறுமுனையில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் நபருக்கு டீம் வியூவர் ஆப் மூலம் தெரியும். தேர்வு எழுதும் நபர்களின் செல்போனும் மறுமுனையில் இருப்பவரின் செல்போனும் டீம் வியூவர் ஆப் மூலம் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும்.
தேர்வு எழுதும் நபர் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் காதில் மிகச் சிறிய ப்ளூடூத்தையும் பொருத்தி இருந்தார். மறுமுனையில் இருக்கும் நபர்கள் விடைகளை சொல்லச் சொல்ல ப்ளூடூத் மூலம் கேட்டு 2 பேரும் உடனுக்குடன் விடைகளை எழுதிக் கொண்டிருந்தனர். போலீசார் ஏற்கனவே உஷார் படுத்தியிருந்ததால் கண்காணிப்பாளர்கள் திறமையாக செயல்பட்டு 2 பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அதற்குள் 80 மதிப்பெண்களுக்கு 70 மதிப்பெண்கள் வரை 2 ேபரும் சரியாக விடைகளை எழுதி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.