சேலம்: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014 முதல் பஞ்சு விலை ஏறாமல் இருந்ததால் ஜவுளி உற்பத்தி நல்லமுறையில் இருந்தது. அதற்கு ஏற்ப ஏற்றுமதியும் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.54 ஆயிரத்திற்கு விற்றது. பருத்தி விளைச்சல் குறைந்ததால் பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது. இதனால் நூல் மில்களில் நூல்களின் உற்பத்தி குறைந்ததால், மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்தது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தி 50 முதல் 60 சதவீதம் சரிந்தது. பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள், மில் அதிபர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். ஆனால் அதற்கு மாறாக பஞ்சு விலை மீண்டும் ஏறியது. பின்னர் பஞ்சு விளைச்சல் அதிகரிப்பால் கடந்தாண்டு பிப்ரவரியில் மீண்டும் பஞ்சு விலை குறையத் தொடங்கியது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை சரிந்து வருவதால் கடந்த சில மாதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் ஜவுளி உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லாததால் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வெண்ணந்தூர் விசைத்தறி சங்க பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் டவல், கேரளா வேட்டி, சேலை, சாமி வேட்டி, ஜரிகை வேட்டி, ஜரிகை சேலை, அபூர்வா சேலை, காட்டன் சேலை, வேஷ்டி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பில் ஜவுளி உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதமாக எப்போதும் இல்லாத அளவில் ஜவுளி தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் காடா ரகம் அதிகளவில் உற்பத்தி நடக்கிறது. அந்த காடா ரகம் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. விசைத்தறிகளை பழைய இரும்பு கடைகளில் எடை போட்டு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலர் தங்களது விசைத்தறி கூடங்களை மூடிவிட்டனர். பல ஊர்களில் விசைத்தறி கூடங்கள் வாடகைக்கு விடப்படும் என்று போர்டுகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியால் ஜவுளிகளின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய ஜவுளிச்சந்தை உள்ள அமெரிக்காவுக்கு பல நாடுகளில் இருந்து ஜவுளி அனுப்பப்படுகிறது. இதில் சீனா முதலிடமும், அடுத்த இடத்தில் சிறிய நாடான வங்காள தேசமும், நம்நாடு கடைசி இடத்திலும் உள்ளது. பருத்தி நூல் அடிக்கடி விலை உயர்வதும், பிறகு குறைவதும் நெசவு தொழிலுக்கு நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. நூல் விலை 3 மாதத்திற்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நூல் விலை ஏறும்போதும், குறையும்போதும் பாதிப்புக்குள்ளாவது விசைத்தறியாளர்கள்தான். எனவே நூல் விலை உயர்வை கண்காணிக்க அரசு குழு ஒன்றை அமைத்து கவனிக்க வேண்டும். ஜவுளி ஏற்றுமதிக்கு என்று மத்தியில் ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும். இதன்மூலம் ஜவுளி ஏற்றுமதியை விரிவுப்படுத்த முடியும். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.500 கோடி அளவில் காடா துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. அதேபோல் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் டவல் மற்றும் சேலைகளும், கரூரில் பெட்ஷீட், ஜமுக்காளங்களும் பல கோடி மதிப்பில் தேக்கமடைந்துள்ளது. ஜவுளிகள் தேக்கம் காரணமாக பல ஊர்களில் நெசவாளர்கள் வேலையின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளது. நெசவாளர்களின் நலன்கருதி தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கி வரும் இலவச வேட்டி, சேலையுடன் இரண்டு டவல்களை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிங்காரம் கூறினார்.