Thursday, June 19, 2025
Home செய்திகள்Banner News 2026 சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்பு

2026 சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்பு

by Karthik Yash

* தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்க முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்க வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு ”ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும்.

திமுகவின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட-பகுதி-நகர-ஒன்றிய-பேரூர்-வட்ட-கிளை திமுக செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும்.

அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை திமுகவின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்ட செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும்” என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், திமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடந்தது.

அப்போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பாஜவையும், அதன் பாசிச-எதேச்சதிகாரப் போக்கு அனைத்திற்கும் துணை போய், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததுடன், தற்போதும் அந்த வஞ்சகத்திற்கு முழுமையாக துணை போகும் அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களில் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜவையும், அதிமுகவையும் முழுமையாக விரட்டியடிக்க வேண்டும். மீண்டும் திமுகவின் நல்லாட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற திமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி, அயராது பாடுபட வேண்டும்.

மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 30% புது வாக்காளர்களை சேர்க்க வேண்டும். திமுக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் விளக்கி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் 30 சதவீதம் புது வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டு பொறுமையுடன் பதில் அளிக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கத்தில் பேசும் போது, ”நம்ம மண் மொழி, மானம் காக்க தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையில் கீழ் ஒண்ணா இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும்- நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என அறிவாலயத்தில் இணைத்திட, சொல்லாற்றல்-செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! களம் 2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் திமுக தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* நம்ம மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையில் கீழ் ஒண்ணா இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. களம் 2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் திமுக தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi