சென்னை: அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஓமியோபதித் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஓமியோபதி துறை ஆணையரகம் வெளியிட்ட அறிக்கை: 2023- 2024ம் கல்வியாண்டு தமிழ்நாட்டிலுள்ள அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளில் சென்னை மற்றும் பாளையங் கோட்டையில் உள்ள இடங்களுக்கு, 2023-2024ம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் 2023ம் ஆண்டிற்கான சித்தா மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதி, தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வாணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இன்று முதல் வரும் 20ம் தேதி முடிய மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால், கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் வரும் 20ம் தேதி மாலை 5.30 மணி வரை ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.