*குழந்தை உட்பட 3 பேர் காயம்
திருமலை : சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு பஸ் டயர் வெடித்து எதிரே வந்த பைக் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நோக்கி நேற்று முன்தினம் தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. ஆந்திர மாநிலம் குண்டூரில் பயணிகள் உணவு சாப்பிட ஓட்டல் அருகே நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. அப்போது தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் அன்னப்பரெட்டிகுடம் என்ற இடத்தின் அருகே சென்றபோது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி எதிரே வந்த பைக் மீது மோதிவிட்டு, நெல் வயல் சேற்றில் பாய்ந்து நின்றது.இந்த விபத்தில் பைக்கில் வந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளிகளான ராதேஷ்(23), ஷியாம்(28) ஆகிய இருவரும் அதே இடத்தில் இறந்தனர். மேலும் அதே பைக்கில் வந்த மற்றொருவர் படுகாயமடைந்தார். அதேபோல் பஸ்சில் பயணம் செய்த குழந்தை உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அப்பகுதியினர் பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டனர்.
மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மிரியாலகுடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், பைக்கில் வந்து காயமடைந்தவரை மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.