Wednesday, December 6, 2023
Home » ‘2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார மாநிலம்’ தமிழ்நாடு இலக்கை விரைவில் அடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

‘2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார மாநிலம்’ தமிழ்நாடு இலக்கை விரைவில் அடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

by Karthik Yash

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை காணும்போது, ‘2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பொருளாதார மாநிலம்’ என்ற இலக்கினை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை நேற்று திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகில் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை கொண்ட குழுமமாகவும், பல்வேறு தொழில் உற்பத்தி மையங்களை கொண்டது ஹிட்டாச்சி நிறுவனம். இந்த நிறுவனம், தனது எரிசக்தி உற்பத்தி திட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் துவக்கியதன் தொடர்ச்சியாகத்தான் இந்த விழா அமைந்துள்ளது. ஏழே மாத இடைவெளியில் நீங்கள் துவங்கி இருப்பது, தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதற்கான அடையாளம். எங்கள் ஆட்சி மீதும், எங்கள் தமிழ்நாட்டின் மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு, என்னுடைய நன்றி.

தமிழ்நாட்டில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொருளாதார வல்லுநர்களுடன் கலந்தாலோசனைகள் மேற்கொண்டு, எங்களது அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப, நமது தொழில் துறையும், மாற்றங்களை மேற்கொண்டு அதே வேகத்தில் பயணம் மேற்கொள்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி, இந்த துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில்தான், ‘‘தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை – 2022’’ கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

இந்த கொள்கை வெளியிட்ட பிறகு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை காணும்போது, ‘2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பொருளாதார மாநிலம்’ என்ற எங்கள் இலக்கினை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்தியாவுக்குள், தமிழ்நாடு எப்போதுமே ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. ஹிட்டாச்சி உள்பட எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளார்கள்.

ஜப்பான் – இந்தியா முதலீடு மேம்பாட்டு கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. அந்த வரிசையில், ஹிட்டாச்சி நிறுவனம் தனது தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவி வருவதோடு மட்டுமின்றி, அவற்றை பெருமளவில் விரிவாக்கம் மேற்கொண்டு வருவதும் மகிழ்ச்சி தருகிறது. சென்னையில் வரவிருக்கும் இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மையங்கள், நமது உள்ளூர் திறன்களுக்கு உலக அளவில் எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டு. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ஹிட்டாச்சி எரிசக்தி நிறுவனத்திற்கு என் வாழ்த்துகள்.

3 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்த புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப மையத்தில், 50,000 சதுர அடியில் சிறப்பு ஆய்வகமும் அமைத்துள்ளது. எரிசக்தி துறையில், நிபுணத்துவம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட உயர்தர வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் வழங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 2500 பேர்களுக்கு உயர் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்திட நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள், தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தசோ சிஸ்டம், ஜெர்மனி நாட்டை சேர்ந்த சீமென்ஸ் மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷனுடன் இணைந்து இந்த மையங்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றன. அதற்கு முன்னதாகவே ஹிட்டாச்சி நிறுவனம் இந்த தொழில்நுட்ப மையத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

பொதுவாக முதலீடுகளை ஈர்ப்பதற்கு நிறுவனங்களுக்கு – அரசு அழைப்பு விடுப்பது ஒரு நடைமுறை. ஆனால் ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டுடனும், தமிழ்நாடு அரசுடனும் நெருக்கமான நிறுவனமாக இருக்கின்ற காரணத்தால், அழைப்பு விடுக்க தேவையில்லை. உங்களை போன்ற நிறுவனங்களுடன் இணைந்துதான் முதலீட்டாளர் மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம். உங்களை போன்ற பிற ஜப்பானிய தொழில் நிறுவனங்களையும் அந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். உங்களது தொழில் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ கணபதி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிளாடியோ பாச்சின், மேலாண்மை இயக்குநர் வேணு, தலைமை தொழில்நுட்ப அலுவலர் உர்ஸ் டோக்வில்லர், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* 3 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்த புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப மையத்தில், 50,000 சதுர அடியில் சிறப்பு ஆய்வகமும் அமைந்துள்ளது.
* எரிசக்தி துறையில், நிபுணத்துவம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட உயர்தர வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் வழங்க உள்ளது.
* இந்த திட்டத்தின் மூலமாக 2500 பேர்களுக்கு உயர் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?