புதுடெல்லி: பன்முகத்தன்மையே இந்தியாவின் மிகப்பெரிய பலம் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 101வது ‘மனதின் குரல்‘ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அப்போது ‘யுவசங்கத்தில் பங்கேற்றவர்களுடன் மோடி கலந்துரையாடினார் அப்போது பேசிய அவர், ”இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. இந்த பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கும் கல்வி அமைச்சகத்தின் யுவசங்கம் சிறந்த முயற்சியாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்ற பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்குள்ள கலாசாரம், பாரம்பரியத்தை புரிந்துக் கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். இத்திட்டத்தில் முதல்கட்டமாக 1,200 மாணவர்கள் 22 மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இன்று மே 28 வீரர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தியாகம், தைரியம், உறுதிப்பாடு நம்மை இன்னமும் ஊக்கப்படுத்துகிறது. அவரது ஆளுமை வலிமையும், பெருந்தன்மையும் கொண்டது. அச்சமற்ற சாவர்க்கரின் சுயமரியாதை குணத்தால் அடிமைத்தனத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுதந்திரத்துக்காக மட்டுமின்றி, சமூக சமத்துவம், சமூகநீதிக்காக அவர் என்ன செய்தார் என்பது நினைவுகூர்ந்து பாராட்டப்பட வேண்டும்” என்று கூறினார்.