மதுரை, மார்ச் 27: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் (மார்ச் 27) நிறைவு பெறுகிறது. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இதன்படி முதல்நாள் தமிழ் மற்றும் மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது. ஏப்.2ல் ஆங்கிலம், ஏப்.4ல் மொழிப்பாடம், ஏப்.7ல் கணிதம், ஏப்.11ல் அறிவியல், ஏப்.15ல் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மேலூர் கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 254 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 775 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மதுரை கல்வி மாவட்டத்தில் 232 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 708 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதன்படி மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 486 பள்ளிகளை சேர்ந்த 38 ஆயிரத்து 483 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.இத்தேர்வுகள் மதுரை மத்திய சிறை உட்பட 146 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க 150க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.