Saturday, July 19, 2025
Home மாவட்டம் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை

1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை

by MuthuKumar

வேலூர், ஜூன் 25: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக ரயிலில் இன்று காட்பாடி வருகிறார். தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஐஜி அஸ்ராகார்க் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் வருகிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலில் காட்பாடி வருகிறார். ரயில் நிலையத்தில் அவருக்கு திமுக பொதுச் செயலாளர்-அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரூ.198 கோடியில் கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், பா.கார்த்திகேயன், அமுலுவிஜயன், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். அதன்பிறகு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு அணைக்கட்டு கெங்கநல்லூர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலய கட்டிடம், மற்றும் கலைஞரின் திருஉருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்கிறார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். இன்றிரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ளே பொன்னேரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிதாக தொடங்கப்படும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறார். மேலும் வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட 46 அரசுத்துறைகள் மூலம் சுமார் ரூ.275 கோடி மதிப்பில் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதில் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.56 கோடி மதிப்பிலான 6 மாடி கூடுதல் கட்டிடமும் திறந்து வைக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கடலூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் போலீசார், வேலூர் மாவட்டத்தில் 1,500 போலீசார் என மொத்தம் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும், நாளையும் வேலூர், திருப்பத்துார் மாவட்டத்தில் டிரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க கலெக்டர்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் வருகையொட்டி, காட்பாடி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் நேற்று காலை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பார்வையிட்டு, முன்னேற்பாடு குறித்து டிஐஜி தேவராணி, எஸ்பிக்கள் மதிவாணன்(வேலூர்), விவேகானந்த சுக்லா(ராணிப்பேட்டை) ஆகியோரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, முதல்வர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டத்தில் முதல்வர் வருகையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்வர் வருகையால், வேலூர், திருப்பத்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi