கும்பகோணம், மே 26: கும்பகோணம் தாலுகா, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி, மாத்தி கேட், வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் மகன் மணிகண்டன் (40). கூலித்தொழிலாளியான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள மின்மாற்றி அருகே சரக்கு ஏற்றி நின்றிருந்த ஒரு லாரியில் ஏறி படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது இரவில் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்த மணிகண்டன் நிலை தடுமாறியதால் பக்கத்தில் இருந்த மின்மாற்றியின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்ததால் அந்த மின்கம்பியுடன் சுருண்டு விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவரது மனைவி துர்கா அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.