திருவாரூர், ஜூன் 7: திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு சமுக பணியாற்றியவர்கள் தமிழக அரசின் விருதிற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூகபணியாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம 15ம் தேதி நடைபெறும் சுதந்திரதின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூகபணியாளர், மருத்துவர், தொண்டுநிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவைகளுக்கு தமிழகஅரசின் சிறப்பு விருதுகள் தமிழக முதல்வரால் கோட்டை கொத்தளத்தில் 10 கிராம் தங்கபதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
எனவே, மேற்காணும் விருதுகளுக்கு திருவாரூர் மாவட்டத்தில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.