திருவாரூர், ஜூன்6: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 10 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை கலெக்டர் சாரு வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் ஒருவருக்கு இலவச சலவை பெட்டி ஆகியவற்றினை கலெக்டர் சாரு வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ சிதம்பரம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், ஆர்டிஓக்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.