திருவிடைமருதூர், ஜூன் 6: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப்பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மூலவர் விமானம் பாலாலயம் செய்யப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் தென்னக திருப்பதி என போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. ரூ.3.16 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி கோயில் விமான பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ராஜகோபுரம், மூலவர் விமானம், அர்த்தமண்டபம், புதிய கொடி மரம், திருக்கண்ணாடி பள்ளியறை உள்ளிட்ட 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. அனைத்து திருப்பணிகள் முடிவுபெற உள்ள நிலையில் வரும் 29ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மூலவர் உள்ளிட்ட மற்ற சன்னதிகளுக்குள் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மூலவர் விமானம் பாலாலயம் செய்யப்பட்டது.
இதையொட்டி சுவாமி சித்திர படம் வரைந்து உற்சவர் பொன்னப்பன் மண்டபம் எழுந்தருள செய்யப்பட்டார். விமான பாலாலயத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 காலம் யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனால் கோயிலில் உற்சவருக்கு மட்டும் வழிபாடு நடைபெறுகிறது. பாலாலய விழாவில் அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர்கள் உமாதேவி, ராமு, உதவி ஆணையர் சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர். வரும் 20 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.