பேராவூரணி, மார்ச்13: பேராவூரணி நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 74 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 46 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலில் பேராவூரணியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அழகேசன் தலைமை வகித்தார்.
பயிற்சி நீதித்துறை நடுவர்கள் சுதர்சன், விஷால் ஆனந்த், வக்கீல் முரளி, சமூக ஆர்வலர் தாமரைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். குடும்பநலம், சிவில், கிரிமினல் உள்ளிட்ட 74 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 46 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுநிலை நிர்வாக உதவியாளர் தேவி, சட்ட தன்னார்வலர் சிந்து, பேராவூரணி வட்ட சட்டப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.


