கோவை, ஜூன் 5: கோவை மதுக்கரை செக்குமர தோட்டம் தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வி (57). இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டவுன்ஹாலில் உள்ள நகைக்கடைக்கு தங்க நாணயம் வாங்க சென்றார். அங்கு 1 பவுன் தங்க நாணயத்தை வாங்கி கொண்டு, காந்திபுரத்தில் இருந்து குரும்பபாளையம் செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது இவரது அருகில் சுமார் 40 வயதான பெண் அமர்ந்திருந்தார். மைல்கல் அருகே பஸ் சென்றபோது, அந்த பெண் தமிழ்செல்வியிடம் உங்கள் காலுக்கு கீழே ஏதோ பொருள் கிடக்கிறது என்றார்.
உடனடியாக தமிழ்செல்வி கீழே பார்த்தபோது, அருகில் இருந்த அந்த பெண் பஸ்சில் இருந்து இறங்கி விட்டார். அவர் சென்ற பின்னர் தமிழ் செல்வி, தனது பையை பார்த்தபோது 1 பவுன் தங்க நாணயத்தை காணவில்லை. அந்த பெண் கவனத்தை திருப்பி தங்க நாணயம் திருடியதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்செல்வி குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.