கோவை, ஜூன் 5: ஆந்திர மாநிலம் பாதபட்டணம் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வர் ராஜ் (15). 9ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால், கோவை சரவணம்பட்டி அருகே ஜி.கே.எஸ் நகரில் வசித்து வரும் தனது தந்தையுடன் தங்கியுள்ளார். இவர் தனது நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டு சரவணம்பட்டி ஸ்ரீநகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர், தேஜஸ்வர் ராஜிடம் பேச்சுக் கொடுப்பதுபோல் நடித்து தேஜஸ்வர் ராஜ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர்.
தடுக்க முயன்றபோது, 2 பேரும் சேர்ந்து தேஜஸ்வர் ராஜ் கையில் கத்தியால் குத்தினர். அவர் வலியால் சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த 2 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனிடம் செல்போன் பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.