கந்தர்வகோட்டை, மார்ச் 5:பல்லவராயன்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பல்லவராயன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் நூறு மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி கட்டிடம் சாலை ஓரத்தில் அமைந்துள்ளதால் அதிக அளவில் போக்குவரத்து ஏற்படுகிறது.
இதனால் மாணவர்களின் கல்வி கற்பதில் கவன சிதைவு ஏற்படுகிறது. மேலும் பள்ளி வளாகம் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. எனவே கல்வி துறை,மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும்,பெற்றோர்களும், பள்ளி மாணவ,மாணவிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.


