பந்தலூர், ஜூன் 5: பந்தலூர் நத்தம் பகுதியில் நடைபாதையில் சாக்கடை நீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பந்தலூர் எம்ஜிஆர் நகர் நத்தம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் நடைபாதையில் குடியிருப்பில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் நடைபாதையில் சூழ்ந்து கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதனால் பாதசாரிகளுக்கு பல்வேறு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைத்து நடைபாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் நகராட்சிக்கு பல முறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.