நீடாமங்கலம், ஜூன்6: நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் கோடை சாகுபடி இயந்திர அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் சுமார் 16,500 ஏக்கரில் கோடை சாகுபடி பணி தொடங்கியது. விவசாயிகள் தமிழக அரசின் குறைவான செலவில் மின்சாரம் பெற்று நிலத்தடி நீர் பயன் படுத்தக்கூடிய இடங்களில் கோடை சாகுபடியை, விவசாயிகள் தொடங்கினர்.
கோடை விவசாயம் செய்த சித்தமல்லி, பரப்பனாமேடு, கடம்பூர், மேலபூவனூர், காளாச்சேரி, ராயபுரம், பெரம்பூர், ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை சாகுபடி செய்த நெல் பயிர்கள் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் விளைந்த நெல்மணிகளை இயந்திரம் மூலம் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த அறுவடை முடிந்த உடன் குறுவை சாகுபடிக்கு நாற்றுகள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.