திருச்சி, ஜூன்.9: தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023ஐ கைவிட வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சின்னதுரை தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் விவசாய விளை பொருள் நிர்ணய ஆணையம் அனைத்து விவசாய விளை பொருள்களுக்கும் தன் உற்பத்தி செய்ய ஆகும் செலவை போன்று இரண்டு மடங்கு விலை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்கவில்லை.
இதனால் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். டெல்லியில் போராடிய விவசாயிகள் விலை நிர்ணய ஆணையத்தை தன்னிச்சையான அதிகாரம் படைத்த அமைப்பாக மாற்றும்படி கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் போராட்டத்தை மதிக்காத மத்திய அரசு அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். கடன்சுமை அதிகரித்து தங்கள் நிலங்களை விற்கும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் இதனால் விவசாயம் செய்யும் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. எனவே விவசாய விளைபொருள் நிர்ணய ஆணையத்தை அதிகாரம் படைத்த ஆணையமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023ஐ சட்டசபையில் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் வாயிலாக தொழில் முனைவோர் அரசுக்கு மனு செய்து 250 ஏக்கர் வரை நிலம் பெற்று தொழில் துவங்கலாம். இச்சட்டத்தை பயன்படுத்தி ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளை கையகப்படுத்த வாய்ப்புள்ளது. நிலத்தடி நீர் குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 12 மணி நேரம் வேலை என்ற தமிழக அரசின் சட்டத்தை தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சட்டத்தை திரும்ப பெற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என கோரிக்கை தெரிவித்துள்ளார்.