நாகப்பட்டினம், ஜன. 21: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 187 மனுக்கள் பெறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இதில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 187 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 890 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1796 மதிப்பில் ஊன்றுகோல் ஆகியவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். இக்குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


