தொட்டியம், ஜூன் 2: தொட்டியம் அருகே வரதராஜபுரம் கிராமத்தில் கோயில் தேர் திருவிழாவில் நடைபெற்ற தகராறு காரணமாக இருதரப்பைச் சேர்ந்த 22 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கோயில் திருவிழா பாதியில் நின்றதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வரதராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரு வேறு சமூகத்தினர் இடையே திருத்தேர் தூக்கி வரும் போது ஏற்பட்ட தகராறில் கல்வீச்சு நடைபெற்றுள்ளது. இதில் சுமார் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு திருச்சி எஸ் பி சுர்ஜித் குமார், முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்தையன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ராஜவேல் (27) என்பவர் தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மற்றொரு தரப்பைச் சேர்ந்த விக்னேஷ் (26)என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
தேர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீசார் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர். திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக திருவிழா நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தேரில் இருந்த சுவாமி தொடர்ந்து வரதராஜபுரம் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் திருவிழா பாதியில் நிறைவு பெற்றதால் பக்தர்கள் சோகம் அடைந்தனர்.