மணிகண்டம், டிச.6:திருச்சி அருகே அரசு கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் ஆண்டிபுதூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் தருண்கார்த்திக் (18) என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் தருண்கார்த்திக் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். மாலை 5 மணியளவில் சக மாணவர்கள் விடுதிக்கு வந்து பார்த்தபோது, விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் மாணவர் தருண்கார்த்திக் தூக்கில் சடலமாக தொங்கினார்.
அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து விடுதிக்காப்பாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய மாணவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்காந காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


