தஞ்சாவூர், மே 31: தமிழகத்திலிருந்து ₹6,500 கோடிக்கு மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தஞ்சாவூர் கரந்தை பகுதியில் உள்ள அரசு மீன்குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி: தமிழக மீன்குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 75 சதவீத மீன் குஞ்சுகள் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்திலிருந்து வளர்ப்பு மற்றும் கடல் மீன்கள் ₹6,500 கோடி அளவிற்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு நிவாரணமாக ₹5,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதை அதிகரிப்பது குறித்து முதல்வர் பரிசீலித்து வருகிறார். தஞ்சாவூரில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது. மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.