தஞ்சாவூர், மே 31: தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோயிலில் நேற்று 20ம் ஆண்டு சம்வத்சர விழா (கும்பாபிஷேகம் தின விழா) கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயில்கள் ஒன்றாக திகழ்கிறது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் மூலை அனுமார் கோயிலை கட்டினார். இக்கோயிலில் மூலைஅனுமாரை சேதுபாவா சுவாமிகள் பிரதிஷ்டை செய்தார். மூலை அனுமார்வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். அனுக்ரஹம் மூர்த்தியாக திகழ்கிறார்.
பிரதி அமாவாசை மற்றும் சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் மூலை அனுமாரை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோயிலுக்கு சுபானு வருடம் வைகாசி மாதம் 26ம் தேதி (09/06/2003) திங்கட்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் தினமான வைகாசி மாதம் அஸ்தம் நட்சத்திரம் மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நேற்று காலையில் 20ம் ஆண்டு
சம்வத்சர விழாவை முன்னிட்டு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.