ஒடுகத்தூர், ஜூன் 4: ஒடுகத்தூர் அருகே சிறுபாலத்தில் கார் கவிழ்ந்து திருப்பத்தூரை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெடுமியூரை சேர்ந்தவர் சுலோச்சனா(57). இவரது மகன் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதால் அவரை வழியனுப்ப உறவினர்கள் 5 பேருடன் நேற்று முன்தினம் மாலை தனது காரில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர். மகனை வழியனுப்பி விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு ஒடுகத்தூர்- ஆலங்காயம் வழியில் சென்றபோது, போடிப்பேட்டை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த சிறு பாலத்தில் இருந்து இருந்து தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுலோச்சனா உள்பட உறவினர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுலோச்சனா வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.