சாத்தூர், மே 31: சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் ஆனி மாத தேர் திருவிழாவிற்காக தடி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் ஆனி மாத தேர் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் சாத்தூர் மற்றும் சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டுக்கான தேர் திருவிழா ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளது.
திருவிழாவில் வெங்கடாசலபதி கோயிலுக்கு சொந்தமான தேர் தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியை அடையும். தேர் திருவிழாவில் தேர் சீராக செல்வதற்காக அணைக்கரைப்பட்டி, சடையம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சக்கரத்தின் பின் பகுதியில் தடி போட்டு தேரை நகர்த்தி செல்வார்கள். இதற்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட மரத்தில் தடியை உருவாக்கும் பணியில் தச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் விரைவில் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்.