சேலம், ஜூன் 4: வைகாசி திருவிழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. சேலம் கோட்டையில் அழகிரிநாத பெருமாள் திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடக்கும் கோட்டை பெருமாள் கோயில் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தாகும். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 25ம் தேதி ெதாடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் மாலையில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி பல்லக்கிலும், பல்வேறு விதமான வாகனங்களிலும் திருவீதி உலா நடந்தது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோாட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை உற்சவர் தேவி, பூதேவியுடன் கோட்டை அழகிரிநாத பெருமாள், கோயிலிலிருந்து தேர் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. வேதங்கள் முழங்க, பக்தர்களின் கோவிந்தா, கோஷத்துடன் திருத்தேர் வடம்பிடித்து தேரோட்டம் நடந்தது. ராஜகணபதி கோயில் அருகே தொடங்கிய தேரோட்டம், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில், வேணுகோபாலசுவாமி கோயில், கடைவீதி வழியே மீண்டும் தேர்நிலையத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர். ேதரோட்டத்தை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று மாலை வண்டிக்கால உற்சவமும், இன்று காலை தீர்த்தவாரி உற்சவம், நாளை இரவு சத்தாபரணம் மற்றும் 6ம் தேதி மாலை வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் உள்ளன.