பாடாலூர், ஜூன் 6: ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தில் ஊரணி பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பால்குடம், முளைப்பாரி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஊரணி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. அன்று முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (திங்கள்கிழமை) திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து கிராமத்தின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நேற்று மாலை மாரியம்மன் கோயில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கூத்தனூர், நாட்டார்மங்கலம், இரூர், நாரணமங்கலம், திருவளக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கூத்தனூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.