குத்தாலம், ஜூன்6: குத்தாலம் அருகே செம்பியன்கோமல் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சிக்குட்பட்ட செம்பியன்கோமல் பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தேர்பவனி திருவிழா கடந்த மே மாதம் 29ம் தேதி திருப்பலி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன், வானவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின் அலங்காரத்துடன் தேர்பவனி திருவிழா நடந்தது. முன்னதாக அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது. மேலும் அதனைத் தொடர்ந்து மாந்தை பங்குத் தந்தை ஜோசப் ஜெரால்டு மற்றும் உதவி பங்கு தந்தை ஜோ பிரான்சிஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்று இறைமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது.
இந்த நிகழ்வில் கோமல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோமல் கிராம தலைவர்கள், மற்றும் விழா குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.