குடியாத்தம், பிப். 13: குடியாத்தம் அருகே கிராமத்தில் நுழைய முயன்ற 2 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தானா, வி.டி.பாளையம், பூசாரி வலசை, கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து நெல், மா, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் உதவியுடன் பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினால் மீண்டும் மீண்டும் யானைகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் 2 யானைகள் பயங்கரமாக பிளிறியபடி விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த யானைகள் மீண்டும் எப்போது ஊருக்குள் நுழையுமோ என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


